உங்கள் கையிலா நாங்கள் இருக்கிறோம்? - பாஜக தலைமையிடம் தேர்தல் ஆணையம் கேள்வி
டெல்லி: உங்கள் கட்டுப்பாட்டிலா நாங்கள் இருக்கின்றோம் என்று தேர்தல் ஆணையம் பாஜகவிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற அக்கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் ஜாய் பானர்ஜியின் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினால் தோற்கடிக்கப்பட்ட ஜாய் பானர்ஜி மையூரேஸ்வர் அருகே நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசுகையில், "அவர்கள் எங்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது நடைபெறாது ஏனென்றால் அந்த தேர்தல் ராணுவத்தின் கண்காணிப்பில் நடத்தப்படும். மேலும், தேர்தல் ஆணையம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது" என்று சர்ச்சைக் கருத்தினைக் கூறினார்.
மேலும், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு நடுநிலையுடன் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையத்துக்கு, மக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதால், அக்கருத்து குறித்து பாஜகவின் தலைமை வரும் 25ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அந்த நோட்டிஸூடன் ஜாய் பானர்ஜியின் பேச்சுகள் அடங்கிய சி.டி.க்களையும், பத்திரிகை ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.
இதுகுறித்து பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, "தேர்தல் ஆணையம் குறித்து தனிப்பட்ட முறையில் தான் தெரிவித்த கருத்துக்காக, ஜாய் பானர்ஜி ஏற்கெனவே மன்னிப்பு கோரியுள்ளார். சட்டரீதியான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் அனைத்து சுதந்திரமான செயல்பாட்டுக்கும் பாஜக மதிப்பளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications