பி.ஏ. சங்மா கட்சியின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து! தேர்தல் ஆணையம் அதிரடி!!
டெல்லி: தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யாத காரணத்தால் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் நேற்று தற்காலிகமாக ரத்து செய்தது.
சட்டசபை தேர்தல் செலவுகள் தொடர்பாக 75 நாட்களுக்குள்ளும், லோக்சபா தேர்தல் செலவுகள் தொடர்பாக 90 நாட்களுக்குள்ளும் அரசியல் கட்சிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணைய உத்தரவு.
இதனடிப்படையில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கு லோக்சபா தேர்தல் செலவுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கோரி தேர்தல் ஆணையம் இரு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் சங்மா கட்சி தாக்கல் செய்த செலவு அறிக்கை ஏற்புடையதாக இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அக்கட்சியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பூர்வமான உத்தரவுகளைப் பின்பற்றாத காரணங்களினால் 1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஆணையின்கீழ், ஒரு கட்சியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்வது இதுவே முதல் முறையாகும்.
தேர்தல் செலவு தொடர்பாக ஏற்கும் வகையில் தேசிய மக்கள் கட்சி அறிக்கை அளித்தால் இந்த தற்காலிகமாக ரத்து விலக்கிக் கொள்ளப்படும்
இவ்வாறு தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. மேகாலயத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.