தேர்தல் கிங், ராஜதந்திரி அமித் ஷாவுக்கு விழுந்த முதல் அடி
டெல்லி: தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவரான பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கிடைத்துள்ள முதல் அடி தான் டெல்லி தேர்தல் தோல்வி.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற காரணமாக இருந்த அமித் ஷா பாஜக தலைவர் ஆக்கப்பட்டார். இதையடுத்து அவர் தலைமையில் அவர் வகுத்துக் கொடுத்த வியூகத்தின்படி பாஜக மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநில தேர்தல்களை சந்தித்தது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேராத ரகுபர் தாஸ் முதல்வராகியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்தது. இத்தனைக்கும் காரணம் மோடி அலையும், அமித் ஷாவின் வியூகமும் தான் என்று பாஜக மார்தட்டியது.
இந்த வெற்றிகளை மனதில் வைத்து அதீத நம்பிக்கை மற்றும் கெத்துடன் அமித் ஷா டெல்லி சட்டசபை தேர்தல் வேலைகளை கவனித்தார். பிற மாநிலங்களை போன்றே டெல்லியிலும் மோடி அலையை வீசவிட்டு வாக்குகளை அள்ளிவிட நினைத்தார் அமித் ஷா. ஆனால் தேவையில்லாமல் மேடைதோறும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை குறைகூறியே விமர்சனம் செய்ததால் மக்களுக்கு பாஜக மீது எரிச்சல் ஏற்பட்டது.
அமித் ஷா என்னதான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டபோதிலும் கெஜ்ரிவால் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் அமித் ஷாவின் ராஜதந்திரம் எடுபடவில்லை.
இத்தனை மாதங்களாக தேர்தலா கூப்பிடு அமித் ஷாவை, வெற்றி நமக்கே என்று கூறிய பாஜக தற்போது சற்று யோசிக்கத் துவங்கியுள்ளது. ராஜதந்திரி என்று பெயர் எடுத்த அமித் ஷாவுக்கு முதல் அடி அதுவும் பலமான அடியாக விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications