வங்கக் கடல் புயல்- சென்னை உட்பட 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை உட்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது.

மழை தீவிரம் அடையும்
புயலால் மழை மேலும் தீவிரம் அடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு விடுமுறை
இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வுகள் ரத்து
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம் தேர்வு தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய மாணவர்கள்
புயல்சின்னம் கரையை நெருங்குவதால் மழையின் வேகம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில மாவட்டங்களில் தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
அத்துடன் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications