உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் மானியம் ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் உணவு தானியங்களுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என்று 25 மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த முதலில் ஓராண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்தக் காலக்கெடு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அப்போதும் பல மாநிலங்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தாததால், இந்தக் காலகெடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மாநிலங்களில் உணவுத்துறை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உணவு பாதுகாப்புச் சட்டத்தை இதுவரை 11 மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதிலும் அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டுமே சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி உள்ளன.
தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை. இந்த மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கான உணவு தானிய மானியம் நிறுத்தப்படும்.
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்தே மாநில அரசுகள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது ", இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications