ஓடும் ரயிலில் திடீர் தீ: அச்சத்தில் கீழே குதித்த பயணிகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ரிசியா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. சில பயணிகள் தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.
கோண்டாவில் இருந்து பரேலிகுக்கு செல்லும் கோண்டா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 10.32 மணியளவில் உத்தரபிரதேசத்தின் ரிசியா மற்றும் மடேரா ஆகிய ரயில் நிலையங்களுக்கு நடுவே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜினில் திடீரென தீ பற்றிக்கொண்டது. தீயின் புகை ரயில் பெட்டிகளுக்குள் வந்தது. சில பயணிகள் அப்போது விழித்திருந்ததால் தீ.. தீ.. என்று கத்தியபடியே அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். ரயில்வே அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, ரயில் காலதாமதமாக அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சென்றது.












Click it and Unblock the Notifications