பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய என்ஜினியர் உள்பட 4 பேர் கைது
டெல்லி: பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளிய என்ஜினியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் கார்காச்சியைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் ராஜா என்பவரை காதலித்துள்ளார். தான் டெல்லியில் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறியுள்ளார் ராஜா. மேலும் அவர் சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே 50 பெண்களை கடத்திய ராஜா சிறுமியை சப்னா கௌர்(25) மற்றும் கௌரவ் கௌர் ஆகியோரிடம் கடந்த ஜுலை மாதம் விற்றுவிட்டார்.
சில நாட்கள் கௌர்களின் வீட்டில் வேலை செய்த சிறுமியை மீரட்டில் விபச்சார தொழில் நடத்தி வரும் ராதாவிடம் அனுப்பி வைத்துவிட்டனர். அங்கு சிறுமியை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திவிட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சிறுமி தனது வாடிக்கையாளரின் செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்தார். அவர்கள் கொடுத்த போலீஸ் அதிகாரியின் எண்ணில் தொடர்பு கொண்டு தனக்கு நடந்ததை விவரித்தார். இதையடுத்து மேற்கு வங்கத்தில் இருந்து சிஐடி குழு மீரட் விரைந்து சென்றது.
கடந்த வெள்ளிக்கிழமை சிஐடி குழு உள்ளூர் போலீசார் உதவியுடன் சிறுமி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டது. மேலும் ராதாவை(30) போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமி டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி சப்னா கௌர் மற்றும் என்ஜினியரான கவ்ரவ் கௌர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வேலை வாங்கித் தருவதாக பக்கத்து வீட்டுக்காரரால் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணையும் ஜி.பி. ரோட்டில் உள்ள ஒரு இடத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கணவர் விவாகரத்து செய்ததால் மகனை காப்பாற்ற வேலைக்கு கிளம்பிய அவர் தீயவர்களின் கையில் சிக்கிவிட்டார். மேலும் அப்பாவி பெண்களை வைத்து தெற்கு டெல்லியில் பாலியல் தொழில் செய்து வந்த சோனியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஜி.பி.ரோட்டில் அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த தகவல் சப்னா மற்றும் கவ்ரவிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications