விதி முறையெல்லாம் மீறல! லலித் மோடி பயண ஆவணங்கள் குறித்து இங்கிலாந்து விளக்கம்!
லண்டன் : ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் வழங்கியதில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து அரசு விளக்கம் அளித்து உள்ளது.
ஐ.பி.எல்- போட்டிகளில் நிதி மோசடி செய்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி.

கடந்த ஆண்டு மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக லண்டனில் இருந்து போர்ச்சுகல் செல்வதற்கு இங்கிலாந்து அரசிடமிருந்து பயண ஆவணங்கள் பெற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும் மனிதாபிமான அடிப்படையில் தான் இதில் உதவியதாக சுஷ்மா சுவராஜ் கூறினார். இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இவ்விவாகாரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு தனது விளக்கத்தை தற்போது அளித்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களில் விரிவான விளக்கம் எதையும் அளிப்பதில்லை என்றும், இந்த பிரச்சினையைப் பொறுத்தவரை இங்கிலாந்து நாட்டின் உரிய சட்டவிதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்தின் விசா மற்றும் குடியேற்ற இலாகாவின் தலைமை இயக்குனர் சாரா ராப்சன், இந்த பிரச்சினையை உரிய முறையிலும் மற்றும் தொழில் ரீதியிலும் திருப்திகரமான முறையில் கையாண்டதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications