ரெண்டு ஓட்டு போட சொன்ன சரத்பவாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
விரல் ‘மை'யை அழித்து விட்டு 2 முறை வாக்களிக்குமாறு கூறிய மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ''மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டமாக நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 2 முறை வாக்குகளை பதிவு செய்யுங்கள்.
ஏப்ரல் 17 ஆம் தேதி சதாரா தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அப்போது சொந்த ஊரான அங்கு சென்று நமது கட்சியின் சின்னமான கெடிகாரத்தில் வாக்களியுங்கள். பின்னர் 24 ஆம் தேதி மும்பையில் தேர்தல் நடைபெறும்போது இங்கு வந்து கெடிகார சின்னத்தில் வாக்களியுங்கள். அப்போது முதலில் கை விரலில் வைக்கப்பட்ட மையை அளித்து விட வேண்டும்" என்றார்.

மத்திய அமைச்சர் சரத்பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. பா.ஜ.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
சரத்பவார் பேச்சு பற்றி பா.ஜ.க மூத்த தலைவர் கிரித் சோமையா நேற்று மும்பையில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், ''வாக்காளர்களிடம் 2 தடவை ஓட்டு போட சொன்ன சரத்பவார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
அவர் அளித்த புகார் மனுவுடன், சரத்பவார் பேச்சு அடங்கிய வீடியோ காட்சியையும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியும் புகார் மனு அளித்தது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம், சரத்பவாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், ''விரலில் வைக்கப்படும் ‘மை'யை அழித்து விடுமாறு நீங்கள் பேசியதில் முகாந்திரம் உள்ளது. இது தேர்தல் நடத்தை முறையை மீறிய செயலாகும். அதனால், வருகின்ற வியாழக்கிழமை மாலைக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் உங்களது கவனத்துக்கு கொண்டு வராமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications