சிறைக்கு செல்லும் வழியில் தப்பியோடிய கைதி... 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கைது
மும்பை: மும்பை பாந்திரா கோர்ட்டில் இருந்து சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய கைதி, சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இம்டியாஸ் கான் (50) என்பவரை கடந்த 2000-ம் ஆண்டு புனே போலீசார் கைது செய்து பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை எரவாடா சிறைக்கு கொண்டு செல்ல பாந்திராவில் இருந்து கல்யாணுக்கு மின்சார ரயிலில் அழைத்துச்சென்றனர்.
கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கியபோது இம்டியாஸ் கான், போலீசாருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து தப்பிச் சென்றார். இதனையடுத்து போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இம்டியாஸ் கான், வாஷியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து சென்று அவரைக் கைதுசெய்தனர். பின்னர் இம்டியாஸ் கான் விசாரணைக்காக புனே போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.
இம்டியாஸிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 14 ஆண்டுகளாக டெல்லி, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் தன் பெயரை பைசல் கான் என மாற்றி ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றையும் பெற்றுக் கொண்டு வாழ்ந்ததாலேயே இம்டியாஸை கண்டி பிடிப்பதில் இவ்வளவு தாமதம் ஆனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications