ரூ.40 கோடி லஞ்சம் கேட்ட முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி: லீக்கான டேப்பால் பெரும் பரபரப்பு
பெங்களூர்: அண்மையில் நடந்த கார்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தெரிவிக்க மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஹெச்.டி.குமாரசாமி தனது கட்சியைச் சேர்ந்த ஒருரிடம் ரூ.40 கோடி லஞ்சம் கேட்ட டேப் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்த கர்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கோரி பிஜபூரைச் சேர்ந்த விஜய்கவுடா பாட்டீல் என்பவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பதிவு செய்யப்பட்ட அவர்களின் பேச்சு அடங்கிய டேப் சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அதில் குமாரசாமி கூறுகையில்,
எம்.எல்.ஏ.க்கள்
நம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் ஏற்கனவே முதல்வர் சித்தராமையாவுடன் பேசி வருகின்றனர். பணத்திற்காக காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளனர்.
பணம்
நீங்கள் பணம் கொடுத்தால் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தலா ரூ.1 கோடி கேட்கிறார்கள். கட்சியில் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களும் பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றுள்ளனர். என்ன செய்ய முடியும்?
ரூ.10 கோடி
ரூ.40 கோடியை ரூ.10 கோடியாக குறைத்துக் கொள்ளுங்கள். எங்கள் சாமிஜி உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் ஆதரவு அளிப்பார் என்று பாட்டீலின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோபம்
பாட்டீலின் ஆதரவாளர்களின் பேச்சை கேட்ட குமாரசாமி கோபம் அடைந்து, நீங்கள் எம்.எல்.சி.யாகி பிஜபூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவது இல்லை. நீங்கள் பிஜபூரில் கட்சிக்காக எதுவும் செய்யவில்லை. நம் கட்சி வெற்றி பெற்ற எந்த சாமிஜியும் உதவியது இல்லை. வியாபாரம் பற்றி பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
டேப்
பாட்டீலுக்கு சீட் கிடைக்காததால் இந்த ஒலி நாடா அதாவது டேப் லீக்காகியுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து குமாரசாமியிடம் கேட்டதற்கு அவர் தான் பேசியதை மறுக்கவில்லை.
அரசியல்
இது தான் இன்றைய அரசியலின் நிலை. முகத்திற்கு நேராக ஒன்று கூறிவிட்டு மற்றொன்றை செய்யும் தலைவர் நான் இல்லை. பிற கட்சிகளும் இதே போன்று தான் செய்துள்ளன. என்னை மட்டும் வில்லனாக நினைப்பது சரி அல்ல. இது குறித்து சட்டசபையிலும், வெளியிலும் பேசத் தயார் என்று குமாரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.