கொல்கத்தாவில் மிட்நைட் பயங்கரம்.. ரவுடிகளிடம் சிக்கி கதறிய முன்னாள் 'மிஸ் இந்தியா'
கொல்கத்தா: முன்னாள், மிஸ் இந்தியா, உஷோஷி சென்குப்தாவிற்கு, இந்த இரவு மறக்க முடியாத இரவாக மாறிவிட்டது. பீதி, பயம், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார் உஷோஷி சென்குப்தா.
2010ஆம் ஆண்டில், மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர்தான், உஷோஷி சென்குப்தா. கொல்கத்தாதான் இவரது சொந்த ஊர். அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு திடுக்கிடும் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பேஸ்புக் போஸ்ட்டில் கொல்கத்தாவில் தனக்கு நிகழ்ந்த ஒரு மோசமான அனுபவத்தை பதிவு செய்துள்ளார். என்ன சொல்லியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்:
|
கார் மீது மோதல்
கடந்த, 17ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து நானும் என் சக ஊழியரும் ஊபர் வாடகை காரில், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது பைக்குகளில் ஒரு கும்பல் எங்களை பின்தொடர்ந்தது. அவர்கள் கார் மீது பைக்கை கொண்டு வந்து மோதச் செய்தனர். இதன்பிறகு காரை நிறுத்தி, டிரைவரை தாக்கினர்.

வீடியோ
இந்த சம்பவங்களை நான் காரில் இருந்தபடியே வீடியோவாக எடுத்தேன். அப்போது, அந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், என் செல்போனை பறிக்க முயற்சி செய்தார். இதையடுத்து, நான் அங்கேயிருந்து அலறியபடியே தப்பியோடினேன். இதனிடையே, சற்று தூரத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை பார்த்தேன். அவரிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி அழுதேன். ஆனால் அவரோ, சம்பவம் நடந்த பகுதி, தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை என்றும், வேறு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படியும் கூறினார்.

மீண்டும் அட்டகாசம்
ஆனால், நேரம் தாமதமானால், டிரைவரை, கொன்றுவிடுவார்கள் என்று கூறி கெஞ்சினேன். இதையடுத்து, அரைகுறை மனதோடு, என்னோடு அந்த போலீசார் வந்தனர். போலீசாரை பார்த்ததும், ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். ஆனால், இத்தோடு இப்பிரச்சினை ஓயவில்லை. அதே காரில் வீட்டுக்கு புறப்பட்டோம். ஆனால், அந்த ரவுடி கும்பல் விடவில்லை. மீண்டும் காரை பின்தொடர்ந்தனர். கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
|
7 பேர் கைது
என்னை காரை விட்டு வெளியே இழுத்துப் போட்டு, செல்போனை உடைக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். அப்பகுதி மக்கள் இதைக் கேட்டு ஓடி வந்தனர். எனவே ரவுடிகள் ஓடிவிட்டனர். இதையடுத்து, பவானிபோர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க டிரைவருடன், சென்றேன், அங்கு என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டு புகாரை பெற்றனர். ஆனால் டிரைவர் புகாரை ஏற்க மறுத்தனர். ஒரே சம்பவத்திற்கு 2 புகாரை வாங்க முடியாது என கூறிவிட்டனர். இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குமுறியுள்ளார், உஷோஷி சென்குப்தா. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications