மகளுக்கு ரூ. 500 கோடியில் ஆடம்பர திருமணம்.. "மைனிங்" ரெட்டிக்கு ஐடி நோட்டீஸ்
ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ஆடம்பர திருமணம் செய்தது தொடர்பான கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ. 500 கோடியில் திருமணம் நடத்தி வைத்தது தொடர்பான கணக்கு வழக்குகளை நவம்பர் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை நடத்தி அனைவரையும் அசரடித்தார். நாட்டு மக்கள் 500க்கும், 1000க்கும் தெருத் தெருவாக அலையும் நிலையில் அவரது இந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் அதிரவும் வைத்தது.
சுரங்க முறைகேடு வழக்கில் சிறைக்குப் போன ஜனார்த்தன ரெட்டி தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் பாஜகவின் முன்னாள் அமைச்சர். ஆனாலும் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. ரெட்டியின் மகள் திருமணம் குறித்து ராஜ்யசபாவிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. நாடு முழுவதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் பெல்லாரியில் மாபியா ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது ரெட்டிக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், வருகிற 24ம் தேதிக்குள் திருமணம் தொடர்பான கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
3 பக்கம் கொண்ட இந்த நோட்டீஸில் மொத்தம் 16 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின்போதும் ஆன செலவுகள், இடம், உணவு, நகை உள்ளிட்டவற்றுக்கா செலவிடப்பட்ட தொகை என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் பணம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளின் எண்கள் குறித்த விவரமும் கேட்கப்பட்டுள்ளது. கையிருப்புப் பணத்தை எங்கிருந்து பெற்றனர் என்ற விவரமும் கேட்கப்பட்டுள்ளது.