18 வயது ஃபேஸ்புக் தோழியை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த சினிமா தயாரிப்பாளரின் மகன் கைது
பெங்களூர்: பெங்களூரில் 18 வயது கல்லூரி மாணவியை மிரட்டி ரூ. 7 லட்சம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் ராகுல் சம்பத்(22). கன்னட சினிமா படத் தயாரிப்பாளரின் மகன். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ராகுல் சமூக வலைதளங்கள் மூலம் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களை தேடிப் பிடித்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் கிழக்கு பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த 18 வயது ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.
ஃபேஸ்புக்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் ராணிக்கு ஃபேஸ்புக்கில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குறுகிய காலத்தில் நெருக்கமாகிவிட்டனர். இருவரும் காரில் நெடுந்தூரம் பயணம் செய்வதை வழக்காக வைத்திருந்தனர்.
பணம் பறிப்பு
காரில் செல்கையில் ராகுல் ராணியின் எதிர்ப்பையும் மீறி அவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அதை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி ராணியிடம் ரூ.7 லட்சம் பணம் பறித்துள்ளார்.
போலீஸ்
ராணி திடீர் என்று அதிக அளவில் பணம் செலவு செய்ததை பார்த்த அவரின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் கேட்டபோது தான் ராணி உண்மையை தெரிவித்தார். அதன் பிறகு இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
சினிமா
என் தந்தை பெரிய தயாரிப்பாளர். நானும் நடிகராகப் போகிறேன் என்று கூறி ராகுல் என்னிடம் நெருங்கிப் பழகினார். படத்தில் முதலீடு செய்ய பணம் வேண்டும் என்று கேட்டார். பணம் அளிக்க மறுத்தபோது அவர் என்னை வம்படியாக கட்டிப்பிடித்து முத்தமிட்டு அதை புகைப்படம் எடுத்து மிரட்டினார் என்றார் ராணி.