கார்த்தி சிதம்பரம் கைது.. மத்திய அரசு மீது காங். குற்றச்சாட்டு.. திமுகவும் கை கோர்த்தது
டெல்லி: கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு உள் நோக்கம் உள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் செய்தித்தொடர்பு துறையின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்து இருப்பதன் மூலம், பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெளியாகியுள்ளது.

நிரவ் மோடி, மெகுல் சோக்சி வங்கி மோசடியையும், ஊழல் ஆட்சி, மோசமான நிர்வாகத்தை மக்களிடம் இருந்து திசை திருப்பவும்தான், இந்த நடவடிக்கையை பாஜக அரசு செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம், காங்கிரஸ் பேசும் உண்மைகளுக்கு பூட்டுபோட்டுவிடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், மோடி அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்துக்கொண்டு செல்வோம், இந்த நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உண்மை உள்ளவர்களாக இருக்கும் என்றார்.
காங்கிரசின் கூட்டணி கட்சியான, திமுகவின், செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை அளித்துள்ள பேட்டியொன்றில், நீரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே செய்திகளின் ஹெட்லைனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications