மக்களே ஓசியில் ஏசி..அதுவும் 1.5 கோடி பேருக்கு? அதென்ன பிரதமர் மோடி ஏசி யோஜனா? இப்படியும் ஃப்ராடா?
டெல்லி: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் ஏசி இயந்திரம் பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025 திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி பேருக்கு இலவசமாக ஏசி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. உண்மையில் இது ஒரு மோசடியான திட்டம் எனவும், மக்கள் இதனை நம்பி தங்களது தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
கார்டு மேல 16 நம்பர் சொல்லு சார் என பழைய நம்பியார் காலத்து டெக்னிக் கை கொடுக்காததால் தற்போது மோசடியாளர்கள் பல்வேறு வகையான மோசடி திட்டங்களை கையில் எடுத்து வருகின்றனர். ஐபிஎல் மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது புதிய வகை மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் வீட்டில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தங்கள் வீடுகளில் ஏசி பொருத்தலாம் என நினைக்கிறார்கள். இதற்காக சமூக வலைதளங்களிலும் ஏசி கடைகளிலும் அவர்கள் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இது போன்ற நடுத்தர வர்க்கத்தினரை குறி வைத்து ஒரு கும்பல் களமிறங்கி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி இலவச ஏசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்ற தலைப்புடன் இந்த செய்தி பரவி வருகிறது.
அதில்,"காற்றில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின் கட்டணங்களை குறைக்கும் நோக்கத்திலும் '5 ஸ்டார் ஏசி'யை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது. பிரதமர் மோடி ஏசி யோஜனா -2025' என்ற பெயரில், மே மாதம் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம். யமுனா பவர் லிமிடெட் என்ற வலைதளத்துக்கு சென்று பதிவு செய்தால், 30 நாளில், இலவச ஏசி கிடைக்கும். இந்த திட்டத்துக்காக, 1.50 கோடி ஏசி தயாராக இருப்பதால், நம் நாட்டில் பெரிய அளவில் ஏசி, பற்றாக்குறை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன." என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது மோசடி கும்பலின் கைவரிசை என மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் ஃபேக்ட் செக் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி பேருக்கு ஏசி வழங்கப்படும் என்ற தகவல் போலியானது. மத்திய மின்துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பதற்காக இதுபோன்ற போலியான பதிவுகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற இணைப்புகளை மக்கள் கிளிக் செய்து தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். இது உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருட வழி வகுக்கும். ஆன்லைன் மோசடிகளுக்கும் வழிவகுக்கும். இது போன்ற போலி செய்திகளை மக்கள் பரப்ப வேண்டாம்:" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications