ஹவ்ரா ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு!
ஹவ்ரா: மேற்கு வங்கத்தில் உள்ள ஹவ்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாலக்நுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் ஹவ்ராவில் இருந்து செகந்திராபாத் செல்லும் பாலக்நுமா எக்ஸ்பிரஸ் ரயில் ஹவ்ரா ரயில் நிலையத்தின் 17வது பிளாட்பார்முக்கு நேற்று இரவு வந்தது. ரயிலை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது பொது கம்பார்ட்மென்ட்டில் கவனிப்பார் இன்றி இரண்டு பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பைகளில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த நிபுணர்கள் அந்த பைகளை சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வெடிகுண்டை ஒரு சிலிண்டரில் வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் பிற பிளாட்பார்ம்களில் இருந்த உள்ளூர், நெடுந்தூர ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.