"பான்” கார்ட் குறித்து தவறான தகவல் அளித்தால் 7 ஆண்டு ஜெயில் - எச்சரிக்கும் இன்கம்டாக்ஸ் துறை!
டெல்லி: இந்தியாவில் பான் எண் இல்லாதவர்கள் அரசிற்கு தவறான தகவலை அளித்தால் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலோ, ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துகள் வாங்கினாலோ, கேஷ் கார்டுக்கு ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினாலோ, பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகளை ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் வாங்கினாலோ பான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தது. இவை உள்பட மொத்தம் 20 பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்நிலையில் பான் எண் இல்லாதவர்கள் தவறான தகவலை அளித்தால் 7 ஆண்டுவரை சிறை தண்டனை அளிக்க வருமான வரி சட்டத்தில் வழிமுறை இருப்பது தெரியவந்துள்ளது. பான் எண் இல்லாதவர்கள், பான் எண் கட்டாய வரம்புக்குள் பரிவர்த்தனை செய்தால் அவர்கள் "படிவம் எண்-60"ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
ஒரே பக்கம் கொண்ட அந்த படிவத்தில், அந்த நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களையும், பணம், காசோலை, கார்டு, வரைவோலை, ஆன்லைன் பரிமாற்றம் போன்றவற்றில் எந்த வழிமுறையில் அவர் பரிவர்த்தனை செய்தார் என்ற விவரத்தையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இப்படி பான் எண் இல்லாதவர்கள் பூர்த்தி செய்த படிவம் எண் 60 இல் ஏதேனும் தவறான, பொய்யான விவரங்கள் இடம்பெற்று இருந்தால் அவர்கள் மீது வருமான வரி சட்டம் 277 ஆவது பிரிவின்கீழ் வழக்கு தொடர வருமான வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொய் தகவல்கள் இடம்பெற்றது நிரூபணமானால் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய இருந்த தொகை ரூபாய் 25 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு அபராதத்துடன் 6 மாதம் முதல் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த தொகை ரூபாய் 25 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை கடுங்கால் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications