காதலி கெளரவக் கொலை- காதலி பிரிவு தாங்காமல் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை
லக்னோ: உத்தரபிரதேசத்தில் காதலித்ததால் இளம்பெண்ணை குடும்பத்தினரே கவுரவக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், புதானா நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்,அதே பகுதியில் வசிக்கும் முபாரிக் உசேன் என்ற வாலிபரை உயிருக்குயிராய் காதலித்தார்.
இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவுரவக் கொலை:
எதிர்ப்பையும் மீறி, இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடர்ந்தது. இதனையறிந்து கடுப்பாகிப் போன அவரது சகோதரர்கள் அந்த இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பிணத்தை மின்விசிறியில் தொங்கவிட்டு, அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடினர்.
மோப்பம் பிடித்த போலீஸ்:
எனினும், இந்த உண்மையை மோப்பம் பிடித்து விட்ட போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, அந்த மரணத்துக்கு காரணம் தற்கொலை அல்ல, கொலைதான் என்பதை உறுதி செய்தனர்.
ஒப்புக்கொண்ட சகோதரர்கள்:
இதனையடுத்து, பலியான பெண்ணின் சகோதரர்கள் அஹ்சான், அஷு ஆகியோரை பிடித்து, உரிய முறையில் விசாரித்தபோது, கொலைக் குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக் காவலின்கீழ் சிறையில் அடைத்தனர்.
காதலனும் தற்கொலை:
காதலி கொல்லப்பட்ட செய்தியை அறிந்த முபாரிக் உசேன் அவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு, பிணமாக தொங்கினார்.
காதலுக்கு ஏன் ஜாதி?:
ஜாதி பார்த்துதான் காதல் வரவேண்டும் என்ற சமூகக் கொடுமைக்கு, மலர்ந்து, மணம் வீசத் துடித்த இரு மொட்டுக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications