மனைவி தொல்லை தாங்கல: தற்கொலை செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு விவசாயி கடிதம்
ஹிசார்: நிலத்தை அபகரிக்க மனைவி அளிக்கும் தொல்லையை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய அனுமதி கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் ஹரியானா மாநில விவசாயி ஹன்ஸ்பிர் சிங்.
ஹரியானா மாநிலம் சிவானி பகுதியில் உள்ள நலோய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான ஹன்ஸ்பிர் சிங்(50). அவர் ஹிசார் ஐஜி அனில் ராவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
என்னிடம் 40 ஏக்கர் நிலம் உள்ளது. எனது மனைவியும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து என்னை பைத்தியம் என்று கூறி என் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள். என் மகனுக்கு நான் 11 ஏக்கர் நிலத்தை அளித்துவிட்டேன். அது போக என்னிடம் தற்போது 29 ஏக்கர் நிலம் உள்ளது. அதை பறிக்கவே என்னை பைத்தியம் என்று பொய் சொல்கிறார்கள்.
மருத்துவமனையில் நடந்த்திய சோதனையில் நான் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சிவானி காவல் நிலையத்தில் என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் அளித்தும் பலனில்லை. தற்கொலை செய்ய அனுமதி அளிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் பரத்வாஜ் கூறுகையில்,
ஒருவர் ஐஜியிடம் புகார் அளித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இந்த விவகாரம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணையை துவங்கிவிட்டதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.