விவசாயிகள் கடன் தள்ளுபடி - அருண் ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை இன்று நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பெண்கள், ஆண்கள் என முதியவர்கள் என விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் தெருவிலேயே உண்டு உறங்கி போராடி வருகின்றனர். இதனையடுத்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால், பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
இன்று காலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து பேசிய பிரகாஷ் ராஜ், விஷால் ஆகியோர், விவசாயிகள் பிரச்சினை தீரவும், கடன் தள்ளுபடி குறித்தும் பேசினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து வருவதாக தெரிவித்தார்.

தேசத்தின் பிரச்சினை
இது தமிழக விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தின் பிரச்சினை. விவசாயிகள் தனி மனிதர்கள் அல்ல. அனைவரும் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே வந்திருக்கிறோம் என்றார். நிதியமைச்சரை சந்தித்து விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசியுள்ளதாகவும் கூறினார். இது முடிவல்ல ஆரம்பம்தான் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.

அரசு தலையிட வேண்டும்
தொடர்ந்து பேசிய விஷால், விவசாயிகள் கடனால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.பத்து பேரின் கடனை தீர்க்க முடியும் என்றால் நாங்களே கடனை தீர்த்திருப்போம். ஆனால் பல கோடிக்கணக்கான கடன் தொகை உள்ளது. எனவே அரசு தலையிட்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடன் தீர்ப்போம்
அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை. சென்னை திரும்பிய உடன் விவசாயிகளின் கடன் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசி முடிவெடுக்கப் போகிறோம். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்களுக்காக மட்டுமே போராடவில்லை. தலைமுறையை காக்க, விவசாயத்தைக் காக்க போராடி வருகின்றனர் என்றும் விஷால் கூறினார்.












Click it and Unblock the Notifications