மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம்: பரூக் அப்துல்லா கருத்து
டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து காஷ்மீர் முதல்வரும் தனது மகனுமான உமர் அப்துல்லா முடிவு செய்வார் என்றும், அதே சமயம் மோடி பிரதமரானால் அதனை ஏற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார் தேசிய மாநாடு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா.
தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி அரசை அமைத்துள்ளன. அதன்படி, அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார். மேலும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சராக தேசிய மாநாடு கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் 700 நிர்வாக மையங்களை உருவாக்க ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டமிட்டிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
இதற்குத் தீர்வு காணும் விதமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், காஷ்மீர் மாநில பொறுப்பாளருமான அம்பிகா சோனி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சைஃபுதீன் சோஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிர்வாக மையங்களை உருவாக்கினால் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது முதல்வர் ஒமர் அப்துல்லாவின் எண்ணம். ஆனால் காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகலாம் என தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :-
இந்தியாவை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தான் பிரதமரை முடிவு செய்வர். அதன்படி நரேந்திர மோடியை பிரதமராக மக்கள் தேர்வு செய்தால், அது அவர்களது விருப்பம். அவ்வாறு நரேந்திர மோடி பிரதமரானால் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடருமா எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனது மகனும், காஷ்மீர் மாநில முதல்வருமான உமர் அப்துல்லா முடிவு செய்வார் எனக் கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் நேற்று மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு மத்திய அமைச்சரான பரூக் அப்துல்லாவும் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸை கதிகலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications