ஃபாலோ செய்த சிறுவர்கள், அவமானத்தில் ஜூஸில் விஷம் கலந்து 2 மாணவிகள் தற்கொலை
சன்டிகர்: ஹரியானாவில் சிறுவர்கள் தங்களை பின்தொடர்ந்து வந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் பழச்சாறில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் மது, நிகிதா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மது பிளஸ் 1ம், நிகிதா பிளஸ் 2ம் படித்து வந்தனர். அவர்களை லோகேஷ் என்பவரும், அவரது நண்பர்களும் கடந்த 3 மாதங்களாக பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் லோகேஷின் தொல்லையை தாங்க முடியாமல் மதுவும், நிகிதாவும் நேற்று டியூனுக்கு சென்ற இடத்தில் பழச்சாறு வாங்கி அதில் விஷத்தை கலக்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கிய அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மதுவும், நிகிதாவும் தங்கள் கைப்பட எழுதி வைத்த கடிதங்களை போலீசார் கைப்பற்றினார். அந்த கடிதங்களில் மாணவிகள் தங்களை பின்தொடர்ந்தவர்களின் பைக் எண்களை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.