காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஆணையம்தான்.. உடனே செயல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் ஏற்பட்டால்
மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் தலைமையகம்
மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அல்லது 22, 23 தேதிகளில்
மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று அல்லது வரும், 22, 23ம் தேதிகளில் அறிவிப்பதாக தெரிவித்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு
இதைத்தொடர்ந்து காவிரி வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கபடுமா என்ற எதிர்பார்ப்ப எழுந்தது. இந்நிலையில் காவிரி நீர் பங்கீடு வரைவு திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம்
அதன்படி பிற்பகல் 2 மணிக்கு காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தப்பட்ட அறிக்கை ஏற்பு
பருவ காலத்திற்கு முன்னதாக வரைவு செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றம் முழுமையாக ஏற்றுள்ளது.
ஆணையத்துக்கு முழு அதிகாரம்
பருவமழை தொடங்கும் முன்பு கெஜட்டில் வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய ஆணையத்துக்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா கோரிக்கை நிராகரிப்பு
மாதந்தோறும் நீர் இருப்பு விவரத்தை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நீர் இருப்பு விவரத்தை தெரிவிக்க முடியாது என்ற கர்நாடகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கு முடித்து வைப்பு
மேலும் ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில்தான் செயல்படும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. மேலும் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.