கடவுள் ராமர் குறித்த பேச்சு.. ராகுலுக்கு புதிய சிக்கல்.. வழக்கு பதிவு செய்யகோரி நீதிமன்றத்தில் மனு
வாரணாசி: கடவுள் ராமர் என்பது ஒரு புனைக்கதை என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மே 19ம் தேதி விசாரிக்க உள்ளது. இது ராகுல் காந்திக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி. இவர் நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி பேசும் கருத்துகளை வைத்து அவர் மீது பாஜகவினர், இந்து அமைப்பினர் ஏராளமான வழக்குகளை தொடர்ந்துள்ளன.

இந்நிலையில் தான் கடவுள் ராமர் குறித்து சர்ச்சையாக பேசிய ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:
கடந்த மாதம் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள பிரவுன் யுனிவர்சிட்டியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கடவுள் ராமர் என்பது ஒரு புனைக்கதை. அப்படி என்று ஒருவர் இல்லை என்ற வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரிசங்கர் பாண்டி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛ராகுல் காந்தி இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசியுள்ளார். இதனால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 196 (இருவேறு சமூகத்தினர் இடையே மதம், இனம் அடிப்படையில் பகையை ஏற்படுத்துதல்), 351 (மிரட்டல் உள்நோக்கம்), 353 (பொதுமக்களிடம் தவறான பிரசாரம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் இந்த மனுவில் காங்கிரஸ் கட்சியினர் மீதும் நடவடிக்கை கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் வரும் 19ம் தேதி மனுவை விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தது. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications