பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென்று தீ விபத்து – 2 பேர் படுகாயம்
பெங்களூர்: ரயில்களுக்கு இது போதாத காலம் போல...சென்னை குண்டுவெடிப்பு அடங்குவதற்குள் வரிசையாக ரயில்கள் பற்றிய விபத்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், பெங்களூரில் இருந்து லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டது. அப்போது திடீரென கேண்டீன் பெட்டியில் தீ பிடித்தது. இதனை பார்த்து பயணிகள் அலறினர்.
இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகளும் கேண்டீன் பணியாளர்களும் உடனடியாக தீயை அணைத்தனர்.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஜோலார் பேட்டையை சேர்ந்த கேண்டீன் பணியாளர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். ரயில் ஜோலார்பேட்டை வந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
சிலிண்டர் கசிவால் தீ பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.