ரிலையன்ஸ் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி; 6 பேர் காயம்
ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜாம்நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில் நேற்று காலை எரிவாயு கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பரவியதால், சில தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டார்கள். ஆலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஜி.ஜி. அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆலையின் ஒரு யூனிட்டில் திடீரென தீப்பிடித்தது. ஆலையின் தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தாலும் சில ஒப்பந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications