ரசிகர்கள் சேட்டையால் தீப்பிடித்த தியேட்டர் - நூலிழையில் உயிர்தப்பிய மக்கள் - அலறவிடும் ஆந்திரா!
அமராவதி: ஆந்திராவில் நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்ததால், இருக்கைகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஆந்திரா போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோவின் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
ஒருசில நொடிகள் தாமதமாகி இருந்தால் கூட, ஏராளமான உயிர் பறிபோயிருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெரியார் கொள்கைக்கு எதிரான படத்துக்கு “நோ”.. கண்டிஷன் போட்டே நடிப்பேன் - நடிகர் சத்யராஜ் விளக்கம்
இந்தியாவில் மட்டும்தான்..
உலகெங்கிலும் சினிமாக்கள் உள்ள போதிலும், இந்தியாவில் உள்ள ரசிகர்களை போல வேறெங்கும் காண முடியாது. மற்ற நாட்டு ரசிகர்கள் திரைப்படங்களை ஒரு பொழுதுப்போக்காக கடந்து விட, நமது ரசிகர்களோ சினிமாக்களையும், அதில் வரும் நாயகர்களையும் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே நினைத்துக் கொள்கின்றனர். தங்களுக்கு பிடித்த கதாநாயகர்களுக்கு வானுயர கட் அவுட்களை வைப்பது, அவற்றுக்கு பாலாபிஷேகம் செய்வது என்பது நம் நாட்டில் காலம் காலமாக தொடர்ந்து வரும் பழக்கமாகவே இருக்கிறது. ரசிகர்களின் இந்தக் கொண்டாட்டம் ஒரு அளவோடு இருந்து கொண்டால் பிரச்சினை இல்லை. அதை தாண்டி செல்லும் போது தான் பிரச்சினை ஆகிறது. இது, ஒருசில நேரங்களில் பெரும் விபத்துக்கும், உயிர்ச்சேதத்துக்கும் வழிவகுத்துவிடும். அப்படியொரு சம்பவம்தான் ஆந்திராவில் நடந்துள்ளது.
'பில்லா' திரைப்படம்
ஆந்திராவில் நடிகர் பிரபாஸுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. பாகுபலியில் கதாநாயகனை நடித்ததை அடுத்து அவரது புகழ் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் கோதாவரி மாவட்டத்தில் உள்ள 'வெங்கட்ராமா' மல்டிபிளக்ஸ் தியேட்டரில் பிரபாஸின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவரது நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியாகிய 'பில்லா' திரைப்படம் நேற்று இரவு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
தியேட்டருக்குள் பட்டாசு
இந்த தீபாவளிக்கு பிரபாஸின் திரைப்படம் ஏதும் வெளிவராததால் வருத்தத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பில்லா திரைப்படத்தை காண வெங்கட்ராமா திரையரங்குக்கு படையெடுத்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்துடனும் ஏராளமான மக்கள், தியேட்டருக்கு வந்திருந்தனர். அப்போது படம் ஆரம்பித்ததும், அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தியேட்டருக்குள்ளே பட்டாசுகளை கொளுத்தினர்.
பறந்த ராக்கெட் - தீப்பிடித்த இருக்கை
அப்போது அங்கிருந்த பட்டாசு பாக்ஸ்களில் தீப்பொறி பட்டதில், அதில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் ராக்கெட் பட்டாசுகள் சீறிப்பாய்ந்தில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. அதேபோல, பல இருக்கைகளும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தன. இதனால் பயந்துபோன ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தியேட்டர் முழுவதும் புகைமூட்டம் உருவாகி மூச்சுவிட முடியாத நிலையும் ஏற்பட்டது. பின்னர் தியேட்டர் ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு உள்ளே இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற செய்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர், தீயணைப்புப் படையினர் வந்து ஒரு மணிநேரம் போாரடி தீயை அணைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இந்த பட்டாசுகள் வெடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை அடுத்து, அதை அடிப்படையாக கொண்டு இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.