ஹோட்டல் அறையில் திடீர் தீ.. மயங்கிய மம்தா பானர்ஜி உயிர் தப்பினார்
மால்டா: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மம்தா பானர்ஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்திற்காக மால்டா சென்றுள்ளார் அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மாலை 6.30 மணியளவில் ஏசியில் இருந்து தீ பற்றியுள்ளது. புகை வரவே மூச்சுத் திணறிய மம்தா உடனடியாக உதவி கோரி சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்ட உடன் உதவியாளர், ஹோட்டல் பணியாளர்களை உதவிக்கு அழைத்து வந்து தீயை அணைத்தனர். மம்தா பானர்ஜியை பாதுகாப்பான அறையில் தங்கவைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அதிகப்படியான புகையை சுவாசித்து அவர் லேசாக மயக்கமானதாகவும், அவர் இப்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி தங்கியிருந்த அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தாக ஹோட்டல் பணியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜி தங்கியிருந்த அறையில், தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.