அமிதாப்பின் கே.பி.சி. நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண்: வறுமையால் படிப்பை நிறுத்தியவர்!
மும்பை: அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா என்பவர் ரூ. 1 கோடி வென்றுள்ளார். இந்த சீசனில் ரூ.1 கோடி வென்றுள்ள முதல் பெண் போட்டியாளர் பாத்திமா தான்.
கோடீஸ்வரன் நிகழ்ச்சி இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. நிகழ்ச்சியை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார். இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.

பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல் அவர் பார்த்துக் கொண்டார். அவரது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய ரூ.12 லட்சம் கடனை அடைக்க முடியாமல் பாத்திமா, அவரது தாய் மற்றும் தங்கை தவித்தனர். இந்நிலையில் இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
இது குறித்து பாத்திமா கூறுகையில்,
அமிதாப் பச்சன்ஜி வந்து கட்டிப்பிடிக்கும் வரையில் நான் ரூ.1 கோடி வென்றுவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. எங்களுக்கு உள்ள கடனை அடைக்க இந்த பணம் உதவும். மீதி பணத்தை வைத்து எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்களை வாங்குவேன். முன்பு எங்கள் நிலத்தை பறிக்க பலர் முயன்றனர். ஆனால் தற்போது நான் பரிசுத் தொகையை வென்ற பிறகு மேடம் என்று என்னை அழைக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications