கோபத்தில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுமி... 3 நாட்கள் 3 பேரால் கடத்தி பலாத்காரம் செய்யப் பட்ட கொடூரம்
போபால் : மத்தியப்பிரதேசத்தில் பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி ஒருவர் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் ராத்லம் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரின் 14 வயது மகள் பெற்றோர் திட்டியதால், ஆத்திரத்தில் ஜனவரி 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக சுற்றித் திரிந்த அச்சிறுமியை அன்றிரவு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஜிதேந்திரா என்பவர் பார்த்துள்ளார். அச்சிறுமியை தனது அறைக்கு கடத்திச் சென்ற ஜிதேந்திரா, அங்கு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மறுநாள் காலை அச்சிறுமியை சாலையொன்றில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார் ஜிதேந்திரா.

அப்போது அங்கிருந்து மற்றொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அன்குஸ் என்பவர் சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரும், அச்சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 9ம் தேதி காலை ராத்லம் ரயில்நிலையத்தில் அச்சிறுமியை விட்டு விட்டுச் சென்றுள்ளார் அன்குஸ்.
ரயில் நிலையத்தில் நின்று அழுது கொண்டிருந்த சிறுமியை, அங்கிருந்த ரயில்வே போலீஸ் பாபர் ஹூசைன் விசாரித்துள்ளார். அச்சிறுமிக்கு உதவுவதாகக் கூறி அவரும் அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், ராத்லம் போலீசாரால் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப் பட்டார் அச்சிறுமி. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று நாட்களில் மூன்று நபர்கள் வெவ்வேறு இடங்களில் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸ் பாபர் ஹூசைன் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications