பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி.. வெயிட்டிங்.. ராஜ்நாத் சிங், அமித்ஷா கடும் எச்சரிக்கை!
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை மட்டும் குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 27 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த வெறியாட்டம் உலக நாடுகளையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக நேற்றே ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகருக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்த பல்வேறு கட்ட ஆலோசனைகளை பாதுகாப்புப் படையினருடன் மேற்கொண்டார். மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியையும் அமித்ஷா இன்று பார்வையிட்டார். அனந்தநாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார். இன்று அமித்ஷா நடத்திய பல்வேறு கட்ட ஆலோசனைகளின் போது, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதேபோல மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இயக்கியவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி நிச்சயம் தரப்படும் என கடுமையாக எச்சரித்தார்.
மேலும் இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது; இதில் பல அப்பாவி மக்களின் உயிர்களை பறிகொடுத்துள்ளோம். இத்தகைய பயங்கரவாதத்தை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த தாக்குதலை நடத்தியவர்களும் தூண்டிவிட்ட சக்திகளும் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இதற்கான பதிலடியை விரைவில் இந்தியா கொடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications