அதிரடித் தாக்குதலில் 5 தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் கூண்டோடு காலி.. ராணுவம்
டெல்லி: இநி்திய விமானப்படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பாகிஸ்தான் பகுதிக்குள் செயல்பட்டு வந்த 5 தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள் கூண்டோடு அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து விட்டு பின்னர் இந்தியாவுக்குள் ஊடுறுவதற்காக காத்திருக்கும் தற்காலிக முகாம்கள்தான் இந்த தீவிரவாத ஊடுறுவல் முகாம்கள். பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் இங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவுவார்கள் தீவிரவாதிகள். இந்த முகாம்களைத்தான் தாக்கி அழித்துள்ளது இந்தியா.
மொத்தம் 5 முகாம்களை கூண்டோடு அழித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தமாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் எண்ணிக்கை நிச்சயம் மிகப் பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 தீவிரவாத ஊடுறுவல் முயற்சிகள் தடுக்கப்பட்டதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து ஏராளமான ஜிபிஎஸ் கருவிகளையும் பாகிஸ்தான் அடையாளம் கொண்ட பல சாதனங்களையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகள் பெரிய அளவில் இந்தியாவுக்குள் ஊடுறுவ காத்திருப்பதாக வந்த உறுதியான தகவலைத் தொடர்ந்தே இந்தியா அதிரடித் தாக்குதலில் இறங்கியதாம்.