‘நோபல்’ மலாலாவின் 'நிஜ நாயகி'... இந்திய இளம்பெண் அனோயாரா!
கொல்கத்தா: இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள பாகிஸ்தான் சிறுமி மலாலா, இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 'நிஜ நாயகி' எனப் பாராட்டியுள்ளார்.
பெண் கல்விக்காகக் குரல் கொடுத்ததால் தாலிபன்களால் சுடப்பட்டு படுகாயமடைந்தவர் பாகிஸ்தான் சிறுமி மலாலா. சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, தொடர்ந்து பெண் கல்விக்காகப் போராடி வருகிறார்.
இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியர் கைலாஷுடன் பகிர்ந்து கொள்கிறார் மலாலா. இந்நிலையில், தனது மலாலா பண்ட் ( மலாலா நிதி அமைப்பு ) பேஸ்புக் பக்கத்தில் இந்தியப் பெண் அனோயரா என்பவரைப் புகழ்ந்துள்ளார் மலாலா.

நோபல் பரிசு வென்றதற்காக உலகமே மலாலாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மலாலாவோ இந்தியப் பெண் ஒருவரைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனோயாராவைக் கொண்டாடுகிறது...
இது தொடர்பாக மலாலா ஃபண்ட் என்ற மலாலாவின் பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அனோயாரா இதுவரை 25 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார், கடத்தப்பட்ட 180 சிறுமிகளை மீட்டு, அவர்களது குடும்பத்திடம் சேர்த்துள்ளார், 85 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார், கல்வி பயில முடியாத 200 சிறுவர், சிறுமிகளை பள்ளியில் சேர்த்துள்ளார். அனோயாராவின் இந்தத் துணிவையும், தலைமைப் பண்பையும் மலாலாவும், மலாலா ஃபண்ட் அமைப்பும் கொண்டாடுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஜ நாயகி...
மலாலாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில தினங்களில், அதுவும் சர்வதேச சிறுமிகள் தினமான அக்டோபர் 13-ஆம் தேதி அன்று வெளியிடப் பட்டுள்ள இந்தப் பதிவில் அனோயாராவை "நிஜ நாயகி" என வர்ணித்துள்ளது.
பெண் கடத்தல்...
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி என்ற பகுதியைச் சேர்ந்த அனோயாரா (18), சக நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், தமது பகுதியில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக போராடி வருகிறார்.
விழிப்புணர்வு...
2008-ஆம் ஆண்டு, சேவ் தி சில்ரன் (save the children) என்ற குழந்தைகள் உரிமைக்காக போராடும் தன்னார்வ அமைப்பு, சந்தேஷ்காளி பகுதியில் பல மையங்களை தொடங்கியது. இந்த மையங்கள் அந்தப் பகுதியில் நிலவும் கடத்தல் போன்றவை பற்றிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த உதவியது.
விரட்டியடிப்பு...
இந்த அமைப்பின் மூலம் பெண்கள், சிறுமிகள் கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளார் அனோயாரா. இந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி கடத்த முயன்ற பலரை தனது நண்பர்களுடன் சேர்ந்து விரட்டியடித்துள்ளாராம் அனோயரா.
மலாலாவைச் சந்தித்ததில்லை...
தற்போது கல்லூரியில் பயின்று வரும் அனோயாரா,கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போது, மலாலாவின் தந்தையை பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகரில் சந்தித்துள்ளாராம். ஆனால் மலாலாவை இதுவரை இவர் சந்தித்ததில்லையாம்.












Click it and Unblock the Notifications