பாகிஸ்தானின் ஒரு தோட்டாவுக்கு இந்திய ராணுவத்தினர் கணக்கற்ற தோட்டாக்களால் சுட்டு தள்ளுங்கள்- ராஜ்நாத்
பாகிஸ்தான் ஒரு தோட்டாவுக்கு எண்ணற்ற தோட்டாக்களால் சுட்டுத் தள்ளுங்கள் என்று இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அகர்தலா: பாகிஸ்தான் மண்ணில் இருந்து வரும் தோட்டாவுக்கு இங்கிருந்து எண்ணற்ற தோட்டாக்களை பதிலடியாக கொடுங்கள் என்று இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
60 சட்டசபை தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு வரும் 18-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகர்தலாவின் புறநகர் பகுதியான பர்ஜலாவில் தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அண்டைய நாடான பாகிஸ்தானுடன் இந்தியா அமைதியான முறையில் உறவு கொண்டிருக்கவே விரும்புகிறது.
அமைதியை விரும்புகிறது
இதனால் பாகிஸ்தான் மீது நாம் முதலில் தாக்குதல் நடத்தியதில்லை. அண்டை நாடுகளுடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் இருக்கவே நாம் விரும்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஜம்மு- காஷ்மீர் மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் படைகள் நமது இந்திய படைகள் மீதும் இந்திய பிரதேசத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எண்ணற்ற தோட்டாக்கள்
பாகிஸ்தானில் இருந்து வரும் ஒரு தோட்டாவுக்கு இங்கிருந்து எண்ணற்ற வகையில் தோட்டாக்களை திருப்பி அனுப்புமாறு இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கடந்த 35 ஆண்டுகால ஆட்சியில் அந்த மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிட்டது.
பாஜகவால் மட்டுமே முடியும்
அதுபோல் பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு பிறகு திரிபுரா மக்கள் இடது சாரிகள் மாநிலத்தை ஆள வழி வகுத்து கொடுத்தால் இந்த மாநிலம் மற்றும் அதன் மக்களின் எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவர். திரிபுரா உள்ளஇட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்த நாட்டையும் பாஜகவால் மட்டுமே முன்னேற்ற முடியும்.
வறுமையை ஒழிக்க வேண்டும்
இந்தியாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன. ஏன் இத்தனை மாநிலங்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுத்துள்ளன என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஏனெனில் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வறுமையை ஒழித்து வேலைவாய்ப்புகளை அளிக்க பாஜகவால்தான் முடியும் என்றும் உண்மையாக நம்புகின்றனர்.
பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்
திரிபுராவை ஆள இடது சாரிகளுக்கு எத்தனை முறை வாய்ப்பை கொடுத்து விட்டீர்கள். இந்த ஒரு முறை பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள். அப்போது மாநிலத்தில் அனைத்து தரப்பினர் நலனுக்காகவும் மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்காகவும் வாய்ப்பு தாருங்கள் என்று ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.