நிலம் காக்க போராடும் குர்திஷ் பெண்கள் படை! ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கே மிரட்டல்!!
டெல்லி: கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. இந்த தீவிரவாதிகள் மிகவும் கொடூரமானவர்கள். ஆண், பெண், சிறார், முதியோர் என்று பாகுபாடு பார்ப்பது இவர்களுக்கு வழக்கமில்லாதது. மிகக் கொடூரமானவர்கள்.
ஆனால் இவர்களையும் பயமுறுத்த சிலர் உள்ளனர் என்பது ஆச்சரியமானதுதான். கடவுளுக்குக் கூட இந்த கொடூரர்கள் பயப்படாமல் போகலாம். ஆனால் இவர்களுக்கு பயப்படுகிறார்கள்.. அதுவும் அவர்கள் பெண்கள் என்பது இன்னும் ஆச்சரியமானது.
வல்லவனுக்கும் வல்லவன் என்று கூறும் அளவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கே மிரட்டலாக விளங்குகிறார்கள் இந்தப் பெண்கள். இவர்கள் குர்திஷ் இனத்துப் பெண்கள். குர்திஷ் ராணுவத்தில் இவர்கள் இணைந்துள்ளனர்.
ஆயுதமே இல்லாத நிராயுதபாணி பெண்களைக் கொன்று குவித்த ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்திய குர்திஷ் இனப் பெண்கள் படையிடம் சிக்கி பெரும் அவமானத்தை சந்தித்து வருகின்றனராம்.
அமேஜான்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண்கள் படை 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சதாம் உசேன் அப்போது மிரட்டலாக இருந்தார். அவரது படையினருக்கு எதிராகத்தான் இது உருவாக்கப்பட்டது. இவர்களின் தீரம், வீரம் மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக இவர்கள் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள்.
நிலம் காக்க போராட்டம்
கர்னல் நஹீதா அகமது ரஷீத் தலைமையில் இந்தப் பெண்கள் படை செயல்படுகிறது. ரஷீத் கூறுகையில், மேலும் பல பெண்கள் இப்படையில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். தங்களது நிலத்தை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடத் துணிச்சலுடன் தயாராக உள்ளனர். எங்களது பாதுகாப்பு நடவடக்கைகளில் நாங்கள் பெண்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
பெண்கள் கையால் மரணம்
பெண்களுடன் போரிடுவதை பெரும்பாலும் தீவிவாதிகள் விரும்புவதில்லை. பெண்கள் கையால் சாவதை அவர்கள் விரும்புவதில்லை. காரணம், பெண்கள் கையால் செத்தால் சொர்க்கம் கிடைக்காது என்பது அவர்களது எண்ணம் என்றார் ரஷீத் சிரித்தபடி.
சிறுமிகளும் ஆர்வம்
இந்த பெண்கள் படையில் இளம் பெண்கள் மட்டுமல்லாமல் சிறுமிகளும் கூட சேர ஆர்வம் காட்டுகின்றனராம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பங்களை தீவிரவாதிகளிடம் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது கிராமம், நகரம் ஆகியவற்றைக் காக்கும் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் இவர்கள்.
ஆண்களுக்கு நிகராக
சமையல், பிள்ளை பெறுவது, கணவனைப் பார்த்துக் கொள்வதுதான் பெண்களின் வேலையாகப் பார்க்கிறார்கள். ஆஅனால் நாங்கள் ஆயுதம் ஏந்தி எங்களது மண்ணைக் காக்க பிறந்தவர்கள் என்கிறார் ஒரு பெண் வீராங்கனை. இப்போது எங்களை ஆண்களுக்கு நிகராக மதிக்கிறார்கள் என்றார்.
வீரம் செறிந்த பெண்கள்
ஒரு குர்திஷ் பெண், 100 குர்திஷ் ஆண்களுக்கு சமமானவள். எங்களது தைரியத்திற்கு இணை யாரும் கிடையாது என்கிறார் மற்றொரு வீராங்கனை. இப்படிப்பட்ட பெண்களை எந்த ஆணும் போர்க்களத்தில் போர்த்திருக்க மாட்டான். அப்படி ஒரு வீரம் செறிந்த பெண்கள் நாங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மையில் மிரட்டலாகத்தான் இருக்கிறார்கள் இந்த வீராங்கனைகள்.












Click it and Unblock the Notifications