தேவகவுடா 40 நாட்களில் 2 முறை ஜம்மு காஷ்மீர் விசிட்.. வரவேற்ற பரூக் அப்துல்லா- கடுப்பில் காங்கிரஸ்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவடைந்து தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனர் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜம்மு காஷ்மீர் சென்றிருப்பதும் அவரை விமான நிலையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த 40 நாட்களில் 2-வது முறையாக தேவகவுடா பயணம் மேற்கொண்டிருப்பதும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக தாம் பதவியேற்றாலும், டெல்லியில் ஆளும் மத்திய பாஜக அரசுடன் இணக்கமாகவே செயல்படுவோம். டெல்லியுடன் மோதுவதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்படி பேசுவதற்காக பாஜகவை ஆதரிக்கிறோம்; பாஜக கொள்கைகளை ஏற்கிறோம் என்பது அல்ல. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் மோடியை சந்திப்போம். அதே நேரத்தில் ரத்து செய்யப்பட்ட 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கும் வாய்ப்பில்லை. இது தொடர்பாக மக்களை முட்டாள்களாக்க விரும்பவில்லை எனவும் ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.
ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய பாஜக அரசுடன் இணக்கத்தை ஒமர் அப்துல்லா விரும்புகிறார் என்பதாக பார்க்கப்பட்டாலும் பாஜக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிதான் தேசிய மாநாட்டுக் கட்சி. காங்கிரஸ் கட்சியோ வெறும் 6 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி நினைத்தால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுடன் எப்போது வேண்டுமானாலும் கை கோர்க்கலாம்; காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் நலன் கருதி என சொல்லிவிட்டும் போகலாம்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிராந்திய மக்கள் பாஜகவையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் தேசிய மாநாட்டுக் கட்சியையும் நம்பியே வாக்களித்துள்ளனர். இதனால் வரும் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை துடைத்தழிக்க தேசிய மாநாட்டுக் கட்சியை பாஜக ஆயுதமாகவும் பயன்படுத்தக் கூடும்.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று ஶ்ரீநகர் வருகை தந்தார். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் அவரை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றார். இருவரும் ஹோட்டல் ஒன்றில் சில மணிநேரம் ஆலோசனை நடத்தினர். கடந்த 40 நாட்களுக்கு முன்னரும் தேவகவுடா ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தார் . அப்போது புனித யாத்திரைக்கு வந்ததாக தேவகவுடா கூறியிருந்தார். 91 வயதாகும் தேவகவுடா 40 நாட்களில் 2-வது முறையாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டிருப்பதும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருப்பதும் காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications