முசாபர் நகரில் மீண்டும் கலவரம்: நிவாரண முகாம்களில் இருந்த 4 பேர் பலி
லக்னோ: நேற்று மீண்டும் முசாபர் நகரில் உண்டான கலவரத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப் பட்டிருந்த 4 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
கடந்த மாதத் தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பெண் ஒருவரைக் கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே உண்டான மோதல், பின்னர் பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் சுமார் 62 பேர் பலியானார்கள். முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சுமார் 40 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது அந்த மாவட்டத்தில் அமைதி திரும்பியது. நீடித்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது.
இந்நிலையில், நேற்று மீண்டும் வெடித்த கலவரத்தில் சிக்கி 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரில் ஆறுதல்....
கடந்த மாதம் கலவரம் நடந்த பகுதிகளுக்கு முக்கியத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப் பட்டவர்களிக்கு ஆறுதல் கூறினர். கலவரத்தினால் ஏற்பட்ட சேதாரத்திக் கணக்கிட மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.

நிவாரண நிதி...
பின்னர், இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி அகிலேஷ் யாதவ் ஆணை பிறப்பித்தார்.

இழப்பீடு....
அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

நிவாரணா முகாம்கள்....
அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 800 குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்ல பயந்தபடி இன்னமும் பாதுகாப்பு முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

குழு....
இந்நிலையில், இவர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று நிலம், வீடு போன்றவற்றை வாங்கி, தங்களின் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக உ.பி. பொதுப்பணி துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ரூ 5 லட்சம் நிவாரண நிதி...
இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று கலவரத்தால் இடம் பெயர்ந்த ஆயிரத்து 800 குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்தது.

மீண்டும் கலவரம்...
இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம் புதனா பகுதியில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் பரிதாபமாகப் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் எனச் சொல்லப் படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

8 பேர் கைது...
நிவாரண முகாம்களில் தங்கி இருந்த 4 பேர் பலியான இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications