தமிழ்நாடு ஸ்டைல்.. வருகிறது சூப்பர் சிக்ஸ் திட்டம்.. ஆந்திராவில் பெண்களுக்கு குட் நியூஸ்!
அமராவதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பிறகு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்த சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார்.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார். முன்னாள் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு கட்சிகளும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி தெளித்தன. அதில் குறிப்பாக நம் மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டத்தை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஏற்கனவே தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மகளிர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் தேர்தல் வெற்றிக்கு பிறகு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்த சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். அதன்படி தான் வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் அரசு பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். "சூப்பர் சிக்ஸ் திட்டம்" என்று அழைக்கப்படும் இந்த புது திட்டத்தின் மூலம் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தால் (APSRTC) இயக்கப்படும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதேபோல் திருநங்கைகளும் இந்த பஸ்களில் டிக்கெட் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களது போக்குவரத்து தேவைக்கு மற்றவர்களை சார்ந்திருக்க தேவையில்லை என்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்டப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் செய்வதற்கான அரசாணையை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டிருந்தது.
பெண்களின் கட்டணமில்லா பயணத்தையும் ஒழுங்குபடுத்தி, அதன் தரவுகளை வைத்திருக்க தமிழ்நாடு அரசு, தனியாக மகளிருக்கு இலவச பயணம் என்று குறிப்பிட்டு டிக்கெட்டுகளையும் அச்சடித்து வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications