மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. திடீர் வன்முறையில் இருவர் பலி.. பாஜக தலைவர் உட்பட 5 பேர் படுகாயம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் வன்முறை கட்டுங்கடாமல் சென்ற நிலையில், உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டது.

அதன் பின்னரே அங்குச் சற்று அமைதி திரும்பியது. இருப்பினும், கடந்த சில நாட்களாக அங்கே மீண்டும் வன்முறை ஆங்காங்கே ஆரம்பித்துள்ளது. இந்தச் சூழலில் தான், மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: அங்கு இன்று இரு குழுக்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ருக் கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்தது ஒருவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாஜகவின் இளைஞரணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலைவரான மனோகர்மாயும் பரிஷ் சர்மா என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது: இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லையில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வன்முறையைத் தொடர்ந்து இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள கடங்பண்ட், கோட்ரூக் மற்றும் காங்சுப் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கும் காங்போக்பி மாவட்டத்துக்கும் இடையே உள்ள பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராம பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் வன்முறை: மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் வன்முறை ஆரம்பித்தது. இரு பிரிவினருக்கும் இடையே கடந்த பல மாதங்களாகத் தொடரும் இந்த வன்முறையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.. 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களை விட வெளியேறியுள்ளனர்.
அங்குப் பல மாதங்களாக வன்முறை தொடரும் நிலையில், அங்குப் பாதுகாப்புப் பணியில் 60 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அங்கே இன்னும் முழுமையாக வன்முறை கட்டுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications