கேரளாவில் வசிக்கும் மனைவிக்கு வாட்ஸ் அப் மூலமாக "தலாக்" சொன்ன துபாய் மாப்பிள்ளை!
கோட்டயம்: துபாயில் இருந்தபடி திருமணமான 10 நாளில் மனைவிக்கு வாட்ஸ் அப் வாயிலாக கணவர் மூன்று முறை தலாக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் செர்டலா பகுதியைச் சேர்ந்தவர் ரமீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 21 வயது பல் மருத்துவ மாணவி.

சமீபத்தில் இவருக்கு துபாயில் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 79 சவரன் நகையும், ரூ. 10 லட்சம் பணமும் அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 10 தினத்தில் மாப்பிள்ளை மீண்டும் வேலை நிமித்தம் துபாய் புறப்பட்டுச் சென்று விட்டார்.
துபாய் சென்றடைந்தது தொடர்பாக அவர் ரமீலாவுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து கணவருக்கு போன் செய்து வந்துள்ளார் ரமீலா. ஆனால், அதற்கு பதிலளிக்காத அவரது கணவர், சமீபத்தில் வாட்ஸ் அப் வாயிலாக தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘எதற்காகத் தொடர்ந்து எனக்கு போன் செய்து கொண்டிருக்கிறாய். எனக்காகக் காத்திருக்காதே. நமக்கு ஆப்பிள் பழம் பிடிக்கும் என்பதற்காகத் தொடர்ந்து அதையே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. மற்ற பழங்களையும் சாப்பிடுவோம் அல்லவா? தலாக் தலாக் தலாக்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையத்தின் உதவியை நாடியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைக்கு விரைவில் நேரில் ஆஜராகும் படி, மாப்பிள்ளையின் பெற்றோருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், துபாயில் அவர் தங்கியிருக்கும் இடம் குறித்து விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
திருமணமான 10 நாளில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களால் ரமீலா அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், அவரது வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தலாக் தகவலைத் தொடர்ந்து ரமீலாவும் அவரது 12ம் வகுப்பு படிக்கும் சகோதரியும் தங்களது படிப்பைக் கைவிட்டுள்ளனர்.
ஆனால், இவ்வாறு சமூகவலைதளங்கள் மூலமாக தலாக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, அது செல்லாது என கேரள நட்வதுல் முஜாகைதீன் மாநில தலைவர் அப்துல்லா மஜீத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications