மகளிர் மட்டும்... முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் முதல் ரயில்வே ஸ்டேசன்!
பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் காந்திநகர் ரயில் நிலையம் உள்ளது.
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம், இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் நிர்வாகம் செய்யும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது காந்திநகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டுதோரும் ஒரு பெண் ஊழியர் வீதம் புதிதாக நியமிக்கப்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த ரயில் நிலையத்தில் பணி புரிபவர்கள் அனைவருமே பெண்களாக உள்ளனர்.
தற்போது, அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர், ரயில் நிலைய பெண் கான்ஸ்டபிள், ரயில் நிலைய தலைவர் (ஸ்டேசன் மாஸ்டர்), டிக்கெட் முன்பதிவு கிளெர்க் உள்பட 32 பதவிகளிலுமே பெண் ஊழியர்களே பணி புரிந்து வருகின்றனர்.
இதனால், முற்றிலும் பெண் ஊழியர்களை மட்டும் கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை காந்திநகர் ரயில் நிலையம் பெற்றுள்ளது.
தினந்தோறும் சுமார் 50 ரயில்கள் வரும் இந்த ரயில் நிலையத்திற்கு சராசரியாக 7000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
மும்பையில் உள்ள மடுங்கா ரயில் நிலையமும் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் தான். ஆனாலும் அது புறநகர் ரயில் நிலையம் என்பதால் காந்திநகர் இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் பணிபுரியும் ரயில்நிலையம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவலர்கள் உட்பட அனைத்து பதவிகளிலும் பெண்களே உள்ளதால், பகல், இரவு என எப்போதும் பாதுகாப்பாக பயணம் செய்வதாக இங்கு வரும் பெண் பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.