ரிஷிகேசில் கனமழை கொட்டுகிறது... கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு
ரிஷிகேஷ் : உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் அபாய கட்டத்தை தொட்டு வெள்ளம் பாய்கிறது.
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

ஹரித்துவாரில் கங்கை, டேராடூனில் சோங்க் மற்றும் சுஷ்வா, பிதோராகரில் காளி உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீரின் அளவு அபாயக் கட்டத்தை எட்டி உள்ளது. ரிஷிகேஷ்-யமுனோத்திரி நெடுஞ்சாலை அவ்வப்போது மூடப்படுகிறது.
ரிஷிகேசில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநில அவசரகால நடவடிக்கை மையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
ஆற்றை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகளை தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications