பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக தோல்வி.. காங். வேட்பாளர் கங்காம்பிகே மேயராக தேர்வு
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வெற்றிவாகை சூடியுள்ளது.
பெங்களூர் மாநகராட்சியை பொறுத்தளவில், தமிழக மாநகராட்சிகளை போல ஐந்தாண்டுகளுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை மேயர் தேர்தல் நடைபெறும்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது.
இதையடுத்து காங்கிரசை சேர்ந்த பத்மாவதி என்ற பெண் கவுன்சிலர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு காங்கிரசை சேர்ந்த கவுன்சிலரும், தமிழருமான சம்பத் ராஜ் மேயராக்கப்பட்டார். துணை மேயராக பத்மாவதி நரசிம்மூர்த்தி பதவி வகித்தார்.
மேயர் மற்றும் துணை மேயரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் கங்காம்பிகே மல்லிகார்ஜுன், பாஜக சார்பில் சோபா அஞ்சனப்பா ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். துணை மேயர் பதவியை மஜதவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்து கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. கவுன்சிலர்கள் மட்டுமின்றி பெங்களூரை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என மொத்தம் 259 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்றபோதிலும், 253 பேர்தான் ஓட்டு போட்டனர்.
இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கங்காம்பிகே 130 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் ஜெயநகர், 139வது வார்டு கவுன்சிலராகும். துணை மேயராக ம.ஜ.தவின் ரமிலா உமா சங்கர் வெற்றி பெற்றார்.