2வது நாளாக ராஜ்யசபாவை உலுக்கிய காஸா விவகாரம்!
டெல்லி: காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வரும் விவகாரம் இன்று ராஜ்யசபாவை உலுக்கியது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக வாதம் செய்தன. மறுபக்கம் அரசுத் தரப்பு விவாதம் கூடாது என்று வாதிட்டது. ஆனால் அரசுத் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, விவாதம் வேறொரு நாளில் நடக்கும் என்று அறிவித்தார். அதை எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை. இதனால் அமளியாக இருந்தது.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விவாதம் கூடாது என்று கோரியிருந்தார். அதை நிராகரித்த ஹமீத் அன்சாரி, நான் அமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் உள்ளேன். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக கொடுத்துள்ள நோட்டீஸ்களை நான் நிராகரிக்க முடியாது என்று கூறி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக கொடுத்துள்ள நோட்டீஸ்களில் எந்தவிதத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார் அன்சாரி.
அதேசமயம், இன்று இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். வேறொரு நாளில் எடுக்கலாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதை அன்சாரி ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. உடனடியாக இதுகுறித்து விவாதம் தேவை என்று அவை தொடர்ந்து வலியுறுத்தின. இதனால் அவையில் கூச்சல் குழப்பமாக இருந்தது.
இதன் காரணமாக இன்று அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.