புதிய கடற்படை தளபதி நியமனத்துக்கு முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கண்டனம்
டெல்லி: நாட்டின் புதிய கடற்படை தளபதியாக ராபின் தோவான் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையில் தொடர்ந்து நடந்து வந்த விபத்துக்களினால் அதிருப்தி அடைந்த கடற்படை தளபதி டி.கே.ஜோஷி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அவரது பணியிடம் கடந்த 2 மாதகாலமாக காலியாக இருந்து வந்தது. அவருக்கு பதிலாக அந்த பதவியை பொறுப்பு அதிகாரியாக 59 வயதான கடற்படை துணை தளபதி ராபின் தோவான் வகித்து வந்தார்.
டெல்லி ஐ.என்.எஸ். போர்க்கப்பலின் கட்டளையிடும் கடற்படை முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்த ராபின் தோவான், இந்திய கடற்படை புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் பதவி ஏற்றார். அவரது நியமனத்துக்கு மூத்த அதிகாரி சேகர் சின்ஹா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு மாதத்தில் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடற்படை தளபதியை நியமித்துள்ளது முற்றிலும் நியாயமற்றது என்று முன்னாள் ராணுவ தளபதியும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான விகே சிங் சாடியுள்ளார்.