பரிசுப் பொருள் வழக்கு.. ஜெ., அழகு திருநாவுக்கரசு மட்டும் வழக்கிலிருந்து விடுவி்ப்பு
ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசுப் பொருள் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு இருவரும் மறைந்து விட்டதால் ரூ. 2 கோடி பரிசுப்பொருள் வழக்கில் இருந்து இருவரையும் உச்சநீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. செங்கோட்டையன் மீதான விசாரணை கோடை விடுமுறைக்குப் பின்னர் தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு கி்ப்ட் செக்குகள் வந்தன. முதல்வராக இருப்பவர் இதை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் இதை முதல்வர் ஜெயலலிதா செய்யவில்லை என்று கூறி பின்னர் வந்த திமுக ஆட்சியின்போது வழக்குத் தொடரப்பட்டது.

பரிசுப்பொருள் வழக்கு
ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதில் அழகு திருநாவுக்கரசு பின்னர் திமுகவுக்குப் போய் 2015ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார். ஜெயலலிதாவும் மரணமடைந்து விட்டார். தற்போது செங்கோட்டையன் மட்டுமே தொடர்ந்து அதிமுகவில் இருந்து வருகிறார்.

சிபிஐ குற்றப்பத்திரிக்கை
பரிசுப்பொருள் வழக்கில் 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. இந்த நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், காலதாமதமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதையடுத்து, சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணை ஒத்திவைப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லாமல் காலம் தாழ்த்தி தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான விசாரணையை ஒத்திவைத்தனர். இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு மீண்டும் கோரிக்கை வைத்ததை அடுத்து ஜனவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஜெயலலிதா விடுவிப்பு
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் அழகுத்திருநாவுக்கரசு. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மரணமடைந்தார். உடல்நலக்குறைவினால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இருவரும் மரணமடைந்ததை அடுத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

செங்கோட்டையன் மீது விசாரணை
பினாகி சந்திரகோஷ் ஓய்பு பெறுவதால் புதிய அமர்வு பரிசுப்பொருள் வழக்கை விசாரிக்கும் என்றும் செங்கோட்டையன் மீதான விசாரணை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செங்கோட்டையன் தற்போது அதிமுக அவைத்தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications