உ.பி.யில் தொடரும் அட்டூழியம்: கொன்று மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்ட 15 வயது சிறுமி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி 6 பேரால் கடத்தில் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் பகுதியில் 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அங்ரு மற்றொரு பெண்ணும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தற்போது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது 6 பேரால் கடத்தி கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில்,
என் மகளுக்கு 15 வயது தான். அவரை குழந்தை இல்லாத ஒருவர் மறுமணம் செய்து கொள்ள கேட்டார். எங்கள் மகளுக்கு வெறும் 15 வயது உங்களுக்கோ 40 வயது என்று கூறி எங்கள் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டோம். அவர் தான் என் மகளை கொன்று மரத்தில் தொங்கவிட்டுவிட்டார். என் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.