வேலை தேடி டெல்லி சென்ற இளம்பெண் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்.. ஒருவர் கைது
வேலை தேடி டெல்லிக்கு சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: தெற்கு டெல்லியின் மோதி பாக் பகுதியில் வியாழக்கிழமை இரவு இளம் பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லிக்கு வந்தார். மாலையில் வீடு திரும்புவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது உள்துறை அமைச்சகத்தின் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட கார் ஒன்று அவர் அருகே வந்து நின்றது. காரை ஓட்டி வந்த நபர் இந்த இளம்பெண்ணிடம் அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவரை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

பெண் காரில் ஏறியதும், சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த நபர் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பி ஓடிய இளம் பெண் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார்.
போலீசார் அந்த பெண்ணை தெற்கு பகுதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் இட்டா நகரை சேர்ந்த அவினேஸ் (வயது 28) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கியது. 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா உயிரிழந்தார். இந்த நிலையில் அவ்வவ்போது டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருவது பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications