தெலுங்கானாவில் புத்தக பை சுமை தாங்காமல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி
தெலுங்கானாவின் கரிமாபாத்தில் உள்ள பள்ளியில் மாடியில் இருந்து சரிந்து விழுந்து மாணவி பலியானார். பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
வாரங்கல்: தெலுங்கானா மாநிலம் கரிமாபாத்தில் உள்ள பள்ளியில் நேற்று காலை மாணவி ஒருவர் புத்தகப்பை சுமை தாங்காமல் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
வாரங்கலைச் சேர்ந்த 14 வயதான ஸ்ரீவர்ஷிதா என்கிற மாணவி கரிமாபாத்தில் உள்ள கவுடில்யா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை அடுத்து நேற்று வழக்கம் போல பள்ளி திறக்கப்பட்டது.

அப்போது காலை 8.45 மணியளவில் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீவர்ஷிதா மாடிப்படியில் சென்று கொண்டிருந்தார். மூன்றாவது மாடியை அடைந்தபோது எதிர்பாராத விதமான அவர் மாட்டியிருந்த புத்தகப்பை சரிந்ததில், அந்த மாணவி தவறி விழுந்தார்.
அவருக்கு முன் தலையில் பலத்த அடிபட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் அந்த மாணவிக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டு அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.இந்தத் தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் மரணம் ஏற்பட்டதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் ஸ்ரீதர் கூறுகையில், 'நாங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், இரத்த அழுத்த குறைவு காரணமாகவும், நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் தான் அந்த மாணவி உயிரிழந்தார்' என்றார்.












Click it and Unblock the Notifications